சீதா ராமன் - ஜமீலா கணேசன் கட்டுரை - என் பார்வை
சீதா ராமன் - ஜமீலா கணேசன் கட்டுரை மிக நுட்பமாகவும், விரிவாகவும் எழுதப்பட்ட கட்டுரை ஜமீலா. இலக்கிய நயம் பாராட்டல் கட்டுரைகளுக்குண்டான எல்லா இலக்கணங்களோடும் பொருந்தி வரும் விதத்தில் எழுதியிருக்கிறீர்கள். இஸ்கான் ஊர்வலத்தில் சிறுவர்களுக்குள் பார்த்த வில் சுமந்த ராமன் உங்கள் உள்ளத்தில் ஏற்படுத்திய ஓர் எளிய கேள்விக்கு விடை தேடிச் செல்லும் பயணமாகவே இந்தக் கட்டுரை அமைந்திருக்கிறது. அன்பே உருவான ராமன், தாடகையை வதம் செய்யத் தயங்கிய ராமன், ராமகாதையின் பிற்பகுதியில் ஆயிரக்கணக்கானோரைக் கொன்று குவிக்கும் நிலைக்கு ஏன் தள்ளப்பட்டான் என்பதுதான் அந்தக் கேள்வி. கட்டுரை ஆசிரியர் சிந்தித்து, ஆராய்ந்து அதன் காரணம் ராமன் சீதை மேல் கொண்டிருந்த காதலே என்ற முடிவுக்கு வருகிறார். அவன் தசரத ராமனோ, கோசலா ராமனோ அல்ல, சீதா ராமனே என்று உறுதியாகக் கூறுகிறார். அதற்குக் கம்பனைத் துணைக்கழைத்துக் கொள்கிறார். அவனது பாடல்களிலிருந்து, வால்மீகியில் நாம் காண இயலாத காதல் ததும்பும் பகுதிகளை நமக்கு எடுத்து விளக்குகிறார். கம்பன் மிதிலைக்குள் நுழைகையில் இருவரும் பார்த்துக் கொள்வதிலிருந்து துவங்கி (That அண்ணலும் நோக்கினான் moment!)