வாசிப்பிற்கென்று சில நாவல்கள்

சமீபத்தில் திடீரென்று இந்தியா சென்று வர வேண்டிய நிலை ஏற்பட்டது. வரும்போது சில தமிழ் நாவல்களை வாங்கி வந்துள்ளேன். அவையாவன.

1. கடல்புரத்தில் – வண்ணநிலவன்
2. சாயாவனம் – சா. கந்தசாமி
3. மானசரோவர் – அசோகமித்திரன்
4. யாமம் – எஸ். ராமகிருஷ்ணன்
5. உப பாண்டவம் - எஸ். ராமகிருஷ்ணன்
6. குள்ளச்சித்தன் சரித்திரம் – யுவன் சந்திரசேகர்.
7. ஒரு புளியமரத்தின் கதை – சுந்தர ராமசாமி.
8. ரெயினீஸ் அய்யர் தெரு – வண்ணநிலவன்
9. ஏழாம் உலகம் – ஜெயமோகன்.
10. யாசகம் - இலக்கியச் சிந்தனை 2008ஆம் ஆண்டு சிறந்த சிறுகதைகள்.

குள்ளச் சித்தன் சரித்திரம் படித்து முடித்துவிட்டேன். யுவனின் மொழிநடை வீர்யத்தோடு இருக்கிறது. விறுவிறுப்பாகச் செல்லும் கதை. அளவில் சற்று குறைவாக எழுதி விட்டாரோ என்று தோன்றுகிறது. மீள்வாசிப்பிற்குப் பிறகு இது பற்றி விரிவான பதிவை எழுதலாமென்றிருக்கிறேன்.

சென்ற காலச்சுவடு இதழில் திரும்பிச் செல்லும் வழி என்ற ஒரு நல்ல கதையும் (குலசேகரன் என்று நினைக்கிறேன்)
தீராநதியில் மா.அரங்கநாதனின் மனோரதம் என்ற சுமாரான கதையும் படித்தேன். அதிலேயே அ.முத்துலிங்கம் எழுதியுள்ள குற்றம், ஆனால் குற்றமில்லை வாசிக்கப்பட வேண்டிய கட்டுரை. சில மொழிபெயர்ப்புச் சிறுகதைகளை மின் புத்தகமாகப் படித்து வருகிறேன். ஒவ்வொரு சிறுகதை தரும் அனுபவம் அற்புதம்.
அ.முத்துலிங்கத்தின் கதைகளைப் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். எஸ்.ரா அவர்களுக்குப் பிடித்த எழுத்தாளர் என்று தெரிந்ததும், அவரை உடனே படிக்க வேண்டும் என்று தோன்றியது. சமர்ப்பணம் பகுதியிலேயே கவர்ந்து விடுகிறார். இவரும், இவரது ஆஃப்ரிக்க நண்பரும் ஒரு காட்டுக்குள் நின்றிருக்கிறார்கள். மரத்தின் உச்சியில் அமர்ந்திருக்கும் ஒரு காக்கையை நண்பரிடம் கண்ணால் ஜாடை காட்டுகிறார். நண்பர் தன்னிடம் இருந்த துப்பாக்கியில் குறிபார்த்து காக்கையைச் சுட்டுவிடுகிறார். அது பொத்தென்று அவர் காலடியில் வந்து விழுகிறது. காட்டுக்குள் எத்தனையோ மரங்களிருக்க, அந்த மரத்தில் வந்தமர்ந்த காக்கைக்கும், வராது போன அதன் சந்ததிகளுக்கும் இந்தக் கதைகளை அர்ப்பணம் செய்திருக்கிறார் அ.மு.
1958லிருந்து, 2003 வரை அ.மு. எழுதிய எழுபத்தைந்து சிறுகதைகளின் தொகுப்பு இது. இலங்கையின் கொஞ்சும் சங்கீதத் தமிழைப் படிக்கக் கிடைக்கும் வாய்ப்பை நினைக்கையில் மனதில் ருசிக்கிறது. அவர் கதைகளில் ஊடாடும் மெல்லிய பகடி கதைகளோடு நம்மைப் பிணைத்து இழுத்துச் செல்கிறது.
நூலின் முதல் கதை கோடைமழை. ஆனால் இதுதான் முதலா என்று தெரியவில்லை. தன் ஊரான கொக்குவில்லை அறிமுகப்படுத்துகிறார். இலங்கை “மாப்”பில் கண்டுபிடித்துப் பீற்றிகொள்ளுமளவுக்கு பிரபலமானதில்லையென்றாலும், கானா சேனாவின் கோடா போட்ட புகையிலைச் சுருட்டுக்கும், முறைப்படிக் காய்ச்சிய கள்ளச் சாராயத்தின் நெடிக்கும், சில பிரபலமான கொலைக்கேஸூகளுக்கும் பேர் போன கொக்குவில்லின் ஒழுங்கைகளும் (பாதைகள் என்று நினைக்கிறேன்), அவசரகாலச் சட்டத்தை மீறி மதகுகள் மீது குந்தி அரட்டை அடிக்கும் ஆண்களும், ரெயில்வே லைன் கரையை விளையாட்டு மைதானமாக்கிக் கொண்டுவிட்ட குழந்தைகளும் நமக்கு அறிமுகமாகின்றனர்.
கதை முழுக்கக் கோடையின் நெடி வீசிக்கொண்டே இருக்கிறது. கிழவியிடம் நகையை அடகு வைக்க வரும் இளைஞனும், அதை வேறொருவரிடம் வைத்ததாகச் சொல்லி, தானே வைத்துக் கொண்டு பணம் தரும் கிழவியும் மட்டுமே கதையில் வருகிறார்கள். இருவரும் பேசிக்கொள்வதை திரும்பத் திரும்பப் படிக்கவேண்டும் போல் சரளமான இலங்கைத் தமிழ். அ.மு. கொக்குவில் என்ற உலகத்துக்கு நம்மை அழைத்துச் செல்கிறார். கோடை மழையின் முதல் துளி மண்ணில் விழுந்து எழும் மண்வாசனை நம் நெஞ்சில் தங்கி விடுகிறது.

Comments

  1. இதில் கடல்புரத்தில், சாயவனம்,மானசரோவர்,ஒரு புளிய மரத்தின் கதை, ஏழாம் உலகம் படித்துவிட்டேன்,
    மற்ற புத்தகங்கள் படிக்கணும் ..

    ஒவ்வொரு புத்தகத்துக்கும் தனித்தனி விமர்சனம் எழுதுங்கள் நண்பா..

    ReplyDelete
  2. மிக்க நன்றி நண்பா, விமர்சனம் எழுதுமளவிற்கு எனக்குத் தகுதி இருக்கிறதா என்று தெரியவில்லை. என் வாசிப்பனுபவத்தை நிச்சயம் பதிவு செய்வேன்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு நாவல்கள்

சாதன சதுஷ்டயம் ஓர் அறிமுகம்.

பேராசிரியரின் கிளி - சிறுகதை