மாலத்தீவின் மாணவர்கள்


இந்த ஆசிரியர் தினத்தில் மாலத்தீவில் ஒரு ஆசிரியனாக எனக்கு நேர்ந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று ஒரு எண்ணம். எனக்கு இந்த வாய்ப்பை அளித்த திரு விருட்சம் அவர்களுக்கு நன்றி. மாலத்தீவுகளில் ஆசிரியர் தினம் அக்டோபர் ஐந்தாம் தேதிதான் கொண்டாடப்படுகிறது. அதுதான் உலக ஆசிரியர் தினம். நாம் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனைப் போற்றுவதற்காக செப் 5ல் கொண்டாடுகிறோம்.
 நான் இங்கு வந்து ஏழு வருடங்களாகிறது. ஓர் அரசுப் பள்ளியில் கணித ஆசிரியனாகவும், தற்போது துறைத்தலைவராகவும் இருக்கிறேன். இந்நாட்டில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தைப் பின்பற்றுகிறார்கள்.  இங்குள்ள மாணவர்களுடன் பழகியதில் அவர்களைப் புரிந்துகொண்டேன் என்று சொல்வதை விட எனக்குள் இருந்த ஆசிரியனை நான் சுத்திகரித்துக் கொண்டேன் அல்லது மீள் உருவாக்கம் செய்து கொண்டேன் என்பதே உண்மை.
வகுப்பில் நுழைந்ததும் பதறிப்போய் எழுந்து வணக்கம் சொல்கிற, வகுப்புகள் நடைபெறுகின்ற போது ஆசிரியருக்கு எதிரான எந்தக் கருத்தையும் பேசாத, ஆசிரியர் சொல்வது சில சமயங்களில் தவறேயாயினும் அதை மறுத்துப் பேசாத, எங்கு அவரைச் சந்திக்க நேர்ந்தாலும் மரியாதையோடு விளிக்கிற நம் நாட்டு மாணவர்களுடன் பழகின ஆசிரியர்களுக்கு முதன் முதலில் மாலத்தீவின் குழந்தைகளோடு ஏற்படும் அனுபவம் ஒரு பெரிய கலாசார அதிர்ச்சிக்குரியதாகத்தான் இருக்கும். இங்கு வகுப்பறைகளுக்குள் மாணவர்கள் அதீத சுதந்திரம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். பெற்றோர்கள் கூட அவர்களை ஓர் அளவிற்குத்தான் கண்டித்து வழி நடத்த இயலும். உலகிலேயே விவாகரத்தில் அதிக சதவீதம் உள்ள நாடு மாலத்தீவுகள் என்று ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. இதனால் பெரும்பாலான மாணவர்கள் ஒற்றைப் பெற்றோருடன் தான் வாழ்கிறார்கள். அல்லது இரண்டு பெற்றோருமே விவாகரத்தாகி வேறு திருமணம் செய்து கொண்டதால் மாமா, அத்தை, பாட்டி இப்படி யாராவது ஒருவரது ஆதரவின் கீழ் வாழ நேர்கின்ற குழந்தைகள் அனேகர். பள்ளியில் சேரவிருக்கும் குழந்தைகளின் விண்ணப்ப படிவத்தில் தாய், தந்தை, பாதுகாவலர் ஆகிய மூன்று பேருடைய முகவரிகளுக்கும் தனித்தனி இடம் விடப்பட்டிருக்கும். பெரும்பாலான விண்ணப்பங்களில் மூன்று இடங்களுமே வேறு வேறு முகவரிகளால் நிரப்பப்பட்டிருக்கும்.
அன்பும், அக்கறையும் கிடைக்க வேண்டிய பருவத்தில் அவை மறுக்கப்பட்டு விடுவதால் ஏற்படுகின்ற வெறுப்பையும், கோபத்தையும் உமிழ்வதற்கு அவர்களுக்கு எளிய இலக்காகக் கிடைப்பவர்கள் வெளிநாட்டிலிருந்து அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகச் செல்லும் ஆசிரியரே. புதிதாகச் செல்லும் ஆசிரியரை அவர் ஆயத்தமாக இல்லையென்றால் ஒரு வழி பண்ணி விடுவார்கள். மாணவர்கள் மட்டுமல்ல, மாணவியரும் கூடச் சரியான முறையில் அணுகவில்லையெனில் ஆபத்துதான். அவர்கள் தாக்குதலுக்கு முதலில் இலக்காவது நமது ஆங்கில உச்சரிப்புத்தான். அவர்கள் ஒன்றும் மேற்கத்தியர்களைப் போல உச்சரிப்பதில்லையெனினும், நாம் பேசப் பேச அதைத் திருப்பிச் சொல்லிக் கிண்டலடிப்பார்கள். எனக்கு யெல்லோ (தட்’ஸ் நாட் யெல்லோ, இட்’ஸ் யெலோ)
நடத்துவதைக் கிரகித்துக் கொள்ளும் விஷயத்தில் அவர்கள் நம் மாணவர்கள் போல அல்ல. ஆசிரியர் நடத்துவதைப் புரிந்துகொள்ளவில்லையென்றால் நேரடியாகத் தூங்கப் போய்விடுவார்கள். அப்படித் தூங்கி விட்டால் பரவாயில்லை. பக்கத்து மாணவர்களுடன் அரட்டையில் இறங்குவதற்கும், டேபிள் மேல் மண்டை ஓடு, பிடித்த கால்பந்து வீரர் படம், துணியில்லாத பெண் படம் மற்றும் இன்னபிற ஓவியங்களை வரைவதற்கும், டேபிள் மேல் ஒட்டியிருக்கிற மைக்கா ஷீட்டை உரித்து எடுப்பதற்கும் இறங்கி விடுவார்கள். அவர்களை எந்த வகையிலும் கண்டித்தல் இயலாது. மிரட்டல், கத்தல் எதுவும் எடுபடாது.

நயமாகச் சொன்னால் அங்கே ஆசிரியன் என்று ஒரு ஜந்து இருப்பதைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள். அதே நேரத்தில் பள்ளி நிர்வாகம் வகுப்பு அமைதியாக நடக்கிறதா என்று கவனிப்பதற்காக நியமித்த மேற்பார்வையாளர்கள் பள்ளி முழுதும் சுற்றி வந்து கொண்டே இருப்பார்கள். வகுப்புக்குள் ஏற்படும் பிரச்னைக்கு ஆசிரியர் பதில் சொல்ல வேண்டும். மாணவர்கள் மீதான நடவடிக்கை எதுவும் கடுமையானதாக இருக்காது. மேற்பார்வையாளர் கூப்பிட்டு ஏன் செய்தாய் என்று கேட்பார். அவன் பதினைந்து நிமிடம் அமைதியாக நிற்பான். ஒழுக்கப் படிவம் என்று ஒன்றிருக்கிறது. அதைக் கொடுத்து நிரப்பச் சொல்வார். பிறகு மீண்டும் வகுப்புக்கு அனுப்பி விடுவார். திரும்பி வரும் மாணவன் இன்னும் வன்மத்தோடு ஆசிரியரைப் பழிவாங்குவான். ஆசிரியருக்கு எதிரான செயல்கள் சிலநேரங்களில் எல்லை மீறிப் போவதுண்டு. சில ஆசிரியர்கள் தெருவில் நடக்கும்போது மாணவர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கின்றனர். பக்கத்துத் தீவில் ஒரு ஆசிரியரை  கும்பல் ஒன்று வீடு புகுந்து தாக்கி அவரது கை முறிந்துவிட்டது. அந்தக் கும்பலில் ஒருவன் அந்த ஆசிரியர் புகார் செய்து இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவன். பல ஆசிரியர்கள் மாணவர்களின் தொல்லை தாங்காது வேலையை விட்டு விட்டுச் சென்றிருக்கிறார்கள். மீறி எப்படியும் சமாளித்து விடலாம் என்று தங்கிய சிலர் பள்ளி நிர்வாகத்தாலேயே தகுதியற்றவர்  என்று அனுப்பி வைக்கப் பட்டிருக்கின்றனர். நான் பெரிய கசப்புச் சம்பவங்கள் ஏதுமின்றி ஏழுவருடங்கள் கழித்து விட்டேன்.  என் அனுபவத்தில் பல மாணவர்களைப் பார்த்துக் கத்தியிருக்கிறேன். பலரோடு மோதியிருக்கிறேன். பல நாட்கள் இன்றைக்கு நமக்கு அடி விழப் போகிறது என்று எதிர்பார்த்ததுண்டு. ஆனாலும் இதுவரை அப்படி நிகழ்ந்ததில்லை. நான் அவர்கள் நன்மைக்காகவே அவர்களைக் கண்டிக்கிறேன் என்று உணர்ந்திருப்பார்கள் என்றே நம்புகிறேன்.
       
ஆசிரியர்கள் மட்டுமல்ல, பெற்றோர்களும் கூட குழந்தைகளை அடித்து வளர்க்க முடியாது. எனக்குத் தெரிந்து ஒரு மாணவி தன் தாய் தன்னை அடித்துவிட்டாள் என்பதற்காக போலீசில் சொல்லி விட்டாள். காவல்துறை அவள் தாயை வந்து தூக்கிக் கொண்டு போய் விட்டது. இந்த நாட்டின் சட்டத்தின் படி பதினாலு வயதிற்குட்பட்ட ஒருவர் கொலை செய்தால் கூட அவர்களுக்கு பதினாலு வயது முடிந்த பின்னரே அந்த வழக்கு துவங்கும்.

        கசப்பான நிகழ்வுகள் பல இந்த மாணவர்களால் ஆசிரியர் சமூகத்துக்கு ஏற்பட்டாலும் பழகி விட்டால் இந்த மாணவர்கள் நம் மீது காட்டும் நேசம் எல்லையற்றது. வீட்டில் அவர்களுக்கு கிடைக்காத அன்பும், பரிவும் ஆசிரியர்களிடமிருந்து கிடைப்பதை அவர்கள் தாமதமாகவே உணர்ந்தாலும், அதன் பின் அவர்கள் நம்மைத் தங்களில் ஒருவராகவே எண்ணத் துவங்குகிறார்கள். ஒரு மாணவனுக்கு சில நாட்கள் பாடம் சொல்லிக் கொடுத்ததற்காக தினமும் என் வீட்டிற்கு இரண்டு இளநீர் தேடி வந்து விடும். இன்னொருவன் நள்ளிரவில் நண்பர்களோடு கடலில் மூழ்கிப் பிடித்த லோப்ஸ்டர்களில் ஒன்றைக் கொடுத்துவிட்டுச் சென்றான். அது ஒன்று ஆயிரம் ரூபாய் இருக்கும். எப்படிச் சமைப்பது என்று தெரியாமலேயே சமைத்து உண்டோம். மாணவர்களின் பெற்றோர்களுக்கு நாம் நல்ல ஆசிரியர்கள் என்று தெரிந்துவிட்டால் நம் மீது அன்பைப் பொழிவார்கள். நம்மை அவர்கள் குடும்பத்தில் ஒருவராகவே கருதுவார்கள்.
        இந்நாட்டு மாணவர்களின் சில பண்புகள் வினோதமானவை. நாம் ஒருநாள் அதிக நேரம் தூங்கி பள்ளிக்குச் செல்வதில் தாமதமாகி விட்டால் காரணமாக என்ன சொல்வோம்? சைக்கிள் டயர் பஞ்சராகி விட்டது என்று ஏதாவது சொல்வோம். மரியாதை வேண்டியாவது தூங்கிவிட்டோம் என்ற உண்மையைச் சொல்ல மாட்டோம். அப்படியே சொன்னாலும் நம் வாத்தியார் தோலுறித்து விடுவார். ஆனால் வீட்டுப் பாடம் ஏன் செய்யவில்லையென்று கேட்டால் தூங்கிவிட்டேன், மறந்துவிட்டேன் என்று உண்மையில் என்ன காரணமோ அதைத்தான் சொல்வார்கள். அதே போல் நம் மாணவர்களைப் போல படித்து உயர வேண்டும் என்ற உணர்வூக்கம் இவர்களிடம் குறைந்தே காணப்படுகிறது. உணவு எடுத்துக்கொள்வதில் மிகுந்த கவனமற்றவர்கள். காலை ஏழு மணி முதல் ஒரு மணி வரை பள்ளி என்பதால், காலை உணவு எதுவும் உண்ணாமலேயே பள்ளிக்கு வந்துவிடுவார்கள். ஒழுங்காக நீர் அருந்துவதில்லை. பெரும்பாலான மாணவர்களின் உடல் மிகுந்த பலவீனமாகவே காணப்படுகிறது. பிரேயர் நடக்கையில் பலர் மயங்கி விழுவது வழக்கமான காட்சி. பெண்கள் கதறித் துடித்து மயங்கி விழுவதைக் கண்டு ஆரம்பத்தில் நான் அதிர்ந்ததுண்டு. முக்கியமாக அருகிலிருப்பவர்கள் எந்த எதிர்வினையுமின்றிக் கடந்து செல்வதைக் கண்டு அதிர்ச்சியுற்றிருக்கிறேன். ஆனால் இது வழக்கமாக நடக்கும் செயல், சிறிது நேரத்தில் அவர்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி விடுவார்கள் என்று தெரிந்ததும் நானும் பதறுவதைக் குறைத்துக் கொண்டேன்.
        பள்ளிகள் ஒவ்வொன்றும் அரசுக்குச் சொந்தமானதாக இருந்தாலும் தனித்தனிப் பெயர்களுடனேயே விளங்குகின்றன. ஒவ்வொரு பள்ளிக்கும் தனித்தனிப் பாடலே உண்டு. அதைத்தான் பிரேயரில் பாடுவார்கள். நூறு சதவீதம் இஸ்லாத்தைப் பின்பற்றும் நாடு மாலத்தீவுகள். தினமும் புனித குர் ஆன் வழிபாட்டோடுதான் பள்ளி துவங்கும். சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்குக் குர் ஆன் கற்பிக்கப் படுகிறது. தங்கள் மதத்தின் மீது மிகுந்த பற்று கொண்டவர்கள். இஸ்லாத்தில் ஆண்கள் நகை அணிவது தடை செய்யப்பட்டிருப்பதால், எங்கள் கைகளில் இருக்கும் மோதிரத்தைப் பார்த்து ஆச்சரியப்படுவார்கள். ஆனாலும் அவர்கள் வாழ்க்கை முறையிலும், உடையணிவதிலும் மேற்கத்தியத் தாக்கம் நிறையவே இருக்கிறது. பெண்கள் மிகவும் நவீனமாக உடையணிகின்றனர். திருமணமானவர்களும், மற்றும் பல பெண்களும் புர்கா அணிந்து உடை அணிவதும் உண்டு. பள்ளிக்கு மாணவிகள் நடந்து அல்லது டாக்சியில் மட்டுமே வருகின்றனர். சைக்கிள் ஓட்டுவதில்லை. ஆசிரியர்கள் நாங்கள் எல்லாம் சைக்கிளில்தான் பள்ளிக்குச் செல்வோம். இங்கு நடைபெறும் திருமணங்கள் அனைத்தும் காதல் திருமணங்களே. பெற்றோருக்கு சரி சொல்வது மட்டுமே வேலை. எட்டாம் வகுப்பிலேயே தங்கள் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட ஆரம்பித்துவிடுகிறார்கள்.
        கல்வி கற்றலும், கற்பித்தலும் மாணவர்களை மையமாக வைத்தே அமைய வேண்டும் என்பது மாலத்தீவுகள் அரசின் விருப்பம். அதற்கான பல்வேறு முயற்சிகளையும் அது எடுத்து வருகிறது. எல்லாப் பள்ளிகளிலும் மல்டி மீடியா ப்ரொஜெக்டர் உண்டு. ஏராளமான கணிப்பொறிகள் உண்டு. ஸ்மார்ட் போர்டு என்று ஒன்று உண்டு. அதை ஆன் செய்து விட்டால் கைகளே சாக்பீஸாகி விடுகிறது. கணிப்பொறியிலிருந்து நேரடியாக போதிக்கவேண்டியவற்றை எடுத்து நம் விருப்பப்படி அவைகளை மாற்றிக் கொள்ளலாம். வொர்க் ஷீட் என்பது நாம் எடுக்கும் தலைப்பின் கருத்துக்களை எளிய கேள்விகள், வரைபடங்கள், பொருத்துக வகைக் கேள்விகள் என்று விதவிதமான வடிவங்களில் வெளிப்படுத்தி மாணவர்களை அத்தலைப்பைப் புரியவைக்கப் பயன்படும். பள்ளித் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் அனைத்தும், பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு நீங்கலாக, ஆசிரியர்களே தயாரிக்க வேண்டும். ஆசிரியர் என்றால் தெளிவாகச் சொல்லிக்கொடுத்தால் மட்டுமே போதும் என்று நினைத்திருந்த எனக்கு ஒரு பள்ளியின் நிர்வாகத்தின் செயல்பாடுகளிலும், ஒரு மாணவனின் ஒட்டுமொத்த ஆளுமையைக் கட்டமைக்கும் பணியிலும் ஆசிரியர் ஒருவனின் பங்கு இன்றியமையாதது என்று கற்றுக் கொடுத்தது மாலத்தீவுகளின் அனுபவங்களே.
 நன்றி: விருட்சம்.காம்

Comments

  1. //ஒரு மாணவனின் ஒட்டுமொத்த ஆளுமையைக் கட்டமைக்கும் பணியிலும் ஆசிரியர் ஒருவனின் பங்கு இன்றியமையாதது //

    உண்மை தான். இதை எத்தனை ஆசிரியர்கள் புரிந்து செயலாற்றுகிறார்கள் என்பது கேள்விகுறி.
    நல்லா படிக்கும் மாணவர்களையே பொதுவாக ஆசிரியர்கள் விரும்புகிறார்கள். மாணவர்களின் இயலாமை புரிந்து அவர்களை வழி நடத்தும் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் மிகக் குறைவே என்பதே என் கருத்து. நான் படிக்கும் போதும் இது தான் நிலை.

    ReplyDelete
  2. மாலத்தீவு மாணவர்கள் பற்றிய உங்களோட கட்டுரையை படித்தேன் .எனக்கு புதிய அனுபவமாக இருந்தது . நன்றி .

    ReplyDelete
  3. மிக்க நன்றி கோபால்.

    ReplyDelete
  4. உங்களுக்கு இசையில் ஆர்வம் இருந்தால் நேரம் கிடைக்கும் போது என்னுடைய tamilisaiamutham.blogspot.com படிக்க வாங்க நன்றி .

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு நாவல்கள்

சாதன சதுஷ்டயம் ஓர் அறிமுகம்.

பேராசிரியரின் கிளி - சிறுகதை