அப்பாவின் மேஜை
சிறுகதை ஓரே தொகுப்பாக அறைக்குள் மெல்லிய வெண்ணிறப் படலமாக இன்னுமும் சுழன்று கொண்டிருந்த சிகரெட் புகையால் சண்முக நாதனுக்கு மூச்செடுப்பது சற்று சிரமமாகத்தான் இருந்தது. வீட்டுக்காரம்மா மகன் கீழே சென்று இருபது நிமிடங்களாவது ஆகியிருக்கும். சிகரெட் படலம் போலவே அவன் கொடுத்துச் சென்ற அதிர்வால் ஏற்பட்டு விட்ட நெஞ்சுப் படபடப்பும் இன்னும் அடங்கவில்லை. முகத்துக்கு நேரே புகை விடாத குறைதான். உரையாடலின் ஒவ்வொரு வாக்கியத்தின் முடிவிலும் வாயில் சிகரெட்டைப் பொருத்தி, உதடு குவித்து, நிதானமாய் உறிஞ்சி மூன்று துவாரங்களிலும் புகையை அவிழ்த்து விட்டபின்புதான் மறுவாக்கியத்தைத் தொடங்குகிறான். நாற்பத்தெட்டு வயதான மனிதனின் முன்னிலையில் புகைபிடிப்பது மரியாதைக்கும் நாகரிகத்துக்கும் உகந்த காரியமல்ல என்று அறிவுக்கு எட்டாதவன் மேற்படிப்பு படித்து அயல்நாட்டில் உத்தியோகம் பார்த்து என்ன பிரயோஜனம்? நாற்பத்தெட்டு வயதுதான் என்றாலும் உடலும், மனமும் சோர்ந்து போய் ஐம்பத்தெட்டு மாதிரி தோற்றம் கொண்டிருந்தார் சண்முகநாதன். தாடையைக் கைவிரல்கள் தடவியபோது இரண்டு நாள் தாடி சொரசொரவென்று உறுத்தியது. உப்பும் மிளகும் கல