நாணயத்தின் மூன்றாம் பக்கம் - மைக்ரோ நாவல் (3)


கூடுதுறை பேருந்து நிலையத்தில் இறங்கியபோது, நாங்கள் சந்தித்துக் கொள்வதாக முடிவு செய்திருந்த தேநீர் கடையில் ராமகிருஷ்ணனைக் காணவில்லை. கடையின் உள்ளேயும் அவர் இருப்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. கடைக்கு வெளியே நின்றபடி அலைபேசியில் அவரை அழைத்தேன்.
        போக்குவரத்து ஏற்படுத்திய இரைச்சல் காரணமாக அவரது குரலைப் புரிந்து கொள்வது சிரமமாக இருந்தது. ஒரு சாயப் பட்டறையில் மாட்டிக் கொண்டதாகவும், இன்னும் இருபது நிமிடங்களில் என்னைச் சந்திப்பதாகவும், அதுவரை தேநீர் கடையிலேயே காத்திருக்கும்படியும் சொன்னார். சொன்னார். கிளம்புவதற்கு முன்னமே அவரைத் தொடர்பு கொள்ளாததற்கு என்னயே சபித்துக் கொண்டேன்.
        என் அதிர்ஷ்டத்தை நொந்தபடி கடையின் வெளியில் காத்துக் கொண்டிருக்கையில் (கடையின் உள்ளே ஓர் இருக்கை கூடக் காலியாக இல்லை.) என்னிடத்தில் ஒரு விருந்தினர் வந்தார். அந்த மனிதன் முதலில் தேநீர் கடையின் முதலாளியிடமும், உள்ளே இருந்தவர்களிடமும் தன் அதிர்ஷ்ட்த்தைப் பரிசோதித்திருக்க வேண்டும்; அவன் நின்ற கோலமே, நான் அவனுக்கு என் பாக்கெட்டிலிருந்து ஏதேனும் எடுத்துத் தரவேண்டும் என்று சொல்வதைப் போலிருந்தது. சில நிமிடங்கள் அங்கு அமைதியாக நின்றபடி என்னையே உற்று நோக்கிக் கொண்டிருந்தான். என் உள்ளார்ந்த பண்புகளை எடை போடுவதைப் போலிருந்தது அவன் பார்வை. அவனது இடது உள்ளங்கை என்னை நோக்கி நீட்டப்பட்டிருந்தது.
        ஒரு பிச்சைக்காரனாகத் தோன்றினாலும், அவனது தோற்றம் எனக்குள் ஒரு விரும்பத்தகாத தந்தியை மீட்டி விட்டிருந்த்து. தந்தியின் அதிர்வுகள் அவன் என்னை விட்டுச் சென்றபின்னும் சில நிமிடங்கள் தங்கியிருந்தன. கிழிந்து, அழுக்குப் படிந்த உடையை அணிந்திருந்தான். அவனது தலை தேனிக் கூட்டைப் போலிருந்தது. ஏதோ கருந்திரவம் அவன் உடல் முழுவதும் பூசப்பட்டதைப் போலிருந்தது. வலது காலில் உறையின்றி ஒரு ஷூவை அணிந்திருந்தான். ஷூவின் முன்புறம் ஒரு பெரிய ஓட்டை இருந்தது. எலும்பாக இருந்தாலும் உறுதியான சட்டகம் கொண்டவனாக இருந்தான். அவன் என் முன் என்னிடம் ஒரு ரூபாய் நாணயத்தை எதிர்பார்த்து நிற்பதாகத் தோன்றினாலும், அவனது பார்வை வேறு ஏதோ கதை சொல்வதாகத் தோன்றியது. அவனது கண்கள் நெருப்புப் பந்துகளைப் போல் ஒளி வீசிக் கொண்டிருந்தன; எந்நேரமும் அக்கண்கள் நெருப்பை உமிழ்ந்து விடுவன போலிருந்தன. அவனை அளக்க, அளக்க நான் பதற்றமடைந்தேன். சக மனிதனின் மேலுள்ள கருணையினால் அல்ல, அவனை அவ்விடத்திலிருந்து நீக்கி விட வேண்டுமென்ற குறையாத ஆவலினால் அவனுக்கு எதையாவது கொடுத்து விடுவது என்று முடிவு செய்தேன். சட்டைப்பைக்குள் உலோகம் ஏதேனும் தட்டுப்படுகிறதா என்று துழாவிய போது ஒன்று கிடைத்தது. ஆனால் வெளியில் எடுத்து ஓர் ஐந்து ரூபாய் நாணயத்தைக் கண்டபோது மனம் தளர்ந்தேன். இலக்கற்றுத் தெருவில் திரிகிற ஒரு பிச்சைக்காரனுக்கு ஐந்து ரூபாயைத் தானமளிக்கும் எண்ணம் ஏது எனக்கில்லை. அந்தப் பணத்துக்கு ஒரு டீ குடிக்கலாம்; திரும்பி வீட்டுக்குப் பேருந்தில் செல்ல்லாம். ஐந்து ரூபாய் என்பது மிக்க மதிப்புடையது.  ஆனால் என் சூழலில் இருந்து இவனைத் துடைத்தெறிந்தாக வேண்டும். மன்னிக்கவியலாத குற்றம் செய்தவனைப் போல இவன் என்னைப் பார்த்துக் கொண்டிருப்பது என்னால் அமைதியாக நிற்கக்கூட முடியாத அளவுக்குக் கொடுமையாக இருக்கிறது. அரை மனதோடு அவனது உள்ளங்கையில் நாணயத்தைப் போட்டேன். அவன் எனக்கு நன்றி சொல்லவில்லை; நான் அதை எதிர்பார்க்கவுமில்லை. அதே துளைக்கும் பார்வையோடு அங்கேயே நின்றிருந்தான். அந்த வெளிப்பாடு மாற வேண்டும் என்று நான் எதிர்பார்க்காமல் இருந்ததற்கு என்ன காரணமென்றும் என்னால் விளக்க முடியவில்லை. எதனாலோ அவன் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யக்கூடிய நிலையிலேயே இருந்தேன். என்னை விட்டு விலகவே மாட்டானோ என்று அஞ்சினேன். ஒருவேளை என்னை அவனுடன் அழைத்துச் செல்ல அவன் பிரியப்படலாம். எனக்கு ரஜினிகாந்த் நடித்த ஒரு தமிழ்த் திரைப்படம் நினைவுக்கு வந்தது. நாயகனை ஒரு பிச்சைக்காரன் ரகசிய வழிகளினூடாக இமாலயத்துக்கு அழைத்துச் செல்வான். அங்கு நாயகன் ஞானிகளையும், ரிஷிகளையும் சந்திப்பான். அவனுக்குப் பல வரங்கள் அளிக்கப்படும். இதை நினைக்கையில் எழுந்த புன்னகையை என்னால் அடக்க முடியவில்லை. என் புன்னகையைக் கண்டதும் அவனது பார்வை தீவிரமடைந்தது. நானே அவனைக் கூவி விரட்டிவிடலாமா என்று எழுந்த எண்ணத்தைக் கைவிட்டு, அவனுக்கு எதிர்த்திசையில் நோக்கினேன். கூடுதுறைக் கோயில் கோபுரம் பார்வையில் பட்டது. கோபுரத்தின் ‘சிவ சிவ எழுத்துக்கள் பிரதானமாகத் தெரிந்தன. இன்னமும் அவன் என்னைத்தான் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறான் என்பதை என்னால் உணர முடிந்தது. அந்த இடத்தை விட்டு விலகி விடலாமா என்று யோசிக்க ஆரம்பித்தேன்.
மேலும்.

Comments

Popular posts from this blog

சாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு நாவல்கள்

சாதன சதுஷ்டயம் ஓர் அறிமுகம்.

பேராசிரியரின் கிளி - சிறுகதை