நாணயத்தின் மூன்றாம் பக்கம் 4


அன்று மாலையும் ராமகிருஷ்ணன் பேசத் துவங்குவதற்காக குறுகுறுப்புடன் காத்திருந்தேன்; சரியாகச் சொல்வதானால் அவர் என்னை விட்டு எப்போது விலகுவார் என்று காத்திருந்தேன். என்னவோ எனக்கு இந்தச் சந்திப்பு குறித்து ஒரு விருப்பற்ற உணர்வு ஏற்பட்டது. மேலும் என்னால் அந்தப் பிச்சைக்காரனை மனதிலிருந்து விலக்க முடியவில்லை.
கோயில் கடையிலிருந்து பிரசாதம் வாங்கி வருவதற்காக ராமகிருஷ்ணன் சென்றிருந்தார். திரும்பி வந்தபோது அவர் முகம் பிரகாசமாக இருந்தது. ‘ இங்க விக்கற புளிசாதம்தான் ஊர்லயே பெஸ்டு என்றபடி என்னருகில் அமர்ந்து ஒரு புளிசாதப் பொட்டலத்தை என்னிடத்தில் நீட்டினார்.
புளிசாதப் பொட்டலத்தைத் திறந்தபடியே அவர் முகத்தில் நிலவிய குழந்தைமையைக் கண்டு வியந்தேன். எனக்க்குள் குற்றவுணர்வின் இழை ஒன்று நெளிவதை உணர்ந்தேன்.
‘ சார், அந்த டினோபால் மேட்டரை இன்னும் ஞாபகம் வச்சிருக்கீங்களா? என்றேன் தயக்கத்தோடு.
‘ஓ, யெஸ். கிட்டத்தட்ட லைஃபையே மாத்தின அந்த விஷயத்தை எப்படி மறக்க முடியும்?
‘ ரொம்ப சாரி சார். என்றேன் குற்றவுணர்வு பொங்கியபடி இருந்தது. ‘ எல்லாம் என் தப்புதான்.
‘ சே, சே. அப்படியெல்லாம் சொல்லாத. உன்னால முடிஞ்சத நீ செஞ்ச. அந்த லாட்ல தப்பா டினோபாலைச் சேர்த்தவுடனேயே நீ என்னக் கூப்பிட்டுச் சொல்லிட்ட. நீ பண்ண தப்ப மறைக்கவோ, இன்னொருத்தர் மேல சுமத்தவோ நீ நெனக்கல. அது ரொம்ப உயர்ந்த குணம்பா. நீ பண்ண ஒரே தப்பு என்னோட இன்ஸ்ட்ரக்ஷனை மறந்ததுதான். அது வொயிட் லாட் இல்ல, அதுல டினொபால் சேர்க்கக் கூடாதுன்னு எத்தன தடவ சொல்லிருப்பேன். சரி, உனக்கு அப்ப அனுபவம் பத்தல. ஒரு வாரம் முன்னாடிதான் லேப்ல இருந்து ப்ளீச்சிங்க் டிபார்ட்மெண்டுக்கு மாத்திருந்தாங்க. கொஞ்சம் எச்சரிக்கையா இருந்துருக்கலாம். சரி அத விடு. எல்லாம் நடந்து முடிஞ்ச கதை. என்றார். அவரது கவனம் பேச்சை விட புளிசாதத்தின் மேல்தான் இருந்தது மாதிரி பட்டது.

Comments

Popular posts from this blog

சாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு நாவல்கள்

சாதன சதுஷ்டயம் ஓர் அறிமுகம்.

பேராசிரியரின் கிளி - சிறுகதை