குழந்தைப் பருவத்தில் பனிப்பொழிவு 2

அமெரிக்கச் சிறுகதை மொழியாக்கம் - தொடர்ச்சி.
சாப்பிடுவதற்கு ஏதாவது வேண்டுமென்று அறிவித்தபடியே வீட்டுக்குள் நுழைந்தேன். கோட்டைக் கழற்றி, என்னை உலுக்கிச் சுத்தம் செய்து கொண்ட உடனேயே ஜன்னல் பக்கம் சென்று விட்டேன். இப்படிப் புயல் தொடர்ந்து வீசிக் கொண்டிருப்பது நம்பக் கடினமாக இருந்தது.
உணவருந்தும் மேஜையில் மிகுந்த கிளர்ச்சியுடனிருந்தேன். என்னை சுற்றிலும் என்ன பேசப்படுகிறது என்று கேட்க இயலாது நடுங்கிக் கொண்டிருந்தேன். வெளியிலிருக்கிற இரவையும், என் முகத்தில் இன்னும் ஊதிக் கொண்டிருக்கும் புயலையும் இந்த அறையிலிருந்து கொண்டே உணர முடிந்தது. நான் இன்னும் தெருவிலேயே இருப்பதாகப் பட்டது. என் கண்கள் பனியைப் பார்த்த வண்ணமும், என் மூக்கு அதைச் சுவாசித்த வண்ணமும் இருந்தன. அந்த அறையும், அதிலிருந்தவர்களும் நெடுந்தொலைவு சென்று விட்டனர். நான் வெண்ணெய் தடவிய ரொட்டித்துண்டு ஒன்றை எடுத்துக் கொண்டு மாடியிலிருக்கிற என்னறைக்குச் சென்றேன்.
செய்வதற்கு நிறைய காரியங்கள் இருந்தன. தோலாலான என் காலணிகளின் மீது பன்றிக் கொழுப்பு தேய்த்து அவற்றை நீர்புகாத வண்ணம் மாற்றுதல்; என் தபால் வில்லைத் தொகுப்பை ஒழுங்கு செய்தல்; சமீபத்தில் எனக்குக் கிடைத்த மான் குளம்புக் கத்தியை சாணை பிடித்தல்; என் புதிய ஹாக்கி மட்டைக்கு நாடா சுற்றுதல; என் சென்ற பிறந்த நாள் பணத்தில் வாங்கிய அரை டஜன் புதிய புத்தகங்களிலொன்றைப் படித்தல் இப்படி. இதில் எந்தச் செயலும், அல்லது நான் அப்போது செய்ய நினைத்திருந்த ஐஸ் படகுக்கான திட்டத்தைத் திரும்ப வரைதலும் கூட சாத்தியமற்று இருந்தன. ஜன்னலுக்கு அருகில் ஒரு நாற்காலியில் அமர்ந்து சிந்திக்க இயலாத நிலையில் இருந்தேன். இரவில் வெளிர் புயல் சுழன்று கொண்டிருந்தது. என் உள்ளங்கைகளால் ஜன்னல் மீதிருந்த பனியை உருக்கிக் கொண்டு, ஒரு மணிநேரம் பனிப்பொழிவைப் பார்த்தபடியிருந்தேன். பிறகு தூக்கம் வந்ததால் படுக்கைக்குச் சென்றேன். இன்று பனிப்புயலில் விரைந்த என்னைக் கண்ட செல்வி வீலர் திங்களன்று மீண்டும் உயிரோடு பார்த்தால் எவ்வளவு மகிழ்ச்சியுறுவாள் என்று உறக்க மயக்கத்துடன் எண்ணிப் பார்த்தேன்.
நான் மீண்டும் எழுந்தபோது ஜன்னல் வழியே பார்க்க இயலாதபடி இருந்தது. என் வீட்டில் ஏழுமணிக்குப் பிறகு அடுப்பு எரிவதில்லை. ஏழுமணிக்கு முன்பு வரை வீடு குளிரால் நடுங்கிக் கொண்டிருக்கும். ஜன்னல்கள் அடர்த்தியான ஐஸ் படலத்தால் மூடப்பட்டிருக்கும். ஆனால் உடையணிந்து கொண்டிருந்தபோது பனிப்பொழிவு முடிந்து விட்டது என்பதை அறிந்தேன். வெளியில் அளவுக்கதிகமான காற்று வீசிக் கொண்டிருந்தது. ஜன்னல் துளைகளினூடே வரும் காற்றும் முன் போல அவ்வளவு புத்தியல்போடு இல்லை.
இன்னும் இருண்டுதான் இருந்தது. வறண்டு கூதல் கொண்ட காலை உருகும் மெழுகுவர்த்தியைப் போல பனியின் மீது படுத்துக் கிடந்த்து. வானம் பனிப்பொழிவை நிறுத்தியிருப்பினும், காற்று பனிக்குவியல்களை மேலெழுப்பியதில் கூரைகளில் குட்டிப் பனிப்புயல்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன.
நான் வெளியில் சென்று வெளிப்புறத்தை ஒரு பத்து நிமிடங்களுக்கு ஆராய்ந்தேன். நான் வீட்டுக்குள் திரும்பி வந்தபோது,  வெளியில் சென்று விளையாடக் கூடாது என்று என்னை யாரும் எச்சரிக்க வேண்டிய அவசியமிருக்கவில்லை. வெளியில் நிற்கமுடியாத அளவுக்கு காற்று வீசி என் தோல் கிட்டத்தட்ட உறைந்து போயிருந்தது. காலையுணவை முடித்துக் கொண்டபின், கணப்படுப்புக்கு முன்னால் ஒரு கைதியைப் போல அமர்ந்து கொண்டேன். பிறகு குப்புறப் படுத்தபடி எனக்குப் பரிச்சயமான பெரிய அளவு புத்தகமான தாந்தேயின் பெருந்தீயின் பக்கங்களைப் புரட்டினேன். அது டொரேயின் பயங்கர ஓவியங்களால் நிறைந்திருந்தது.
வீடு சமையல் வேலையிலும், தூய்மைப்படுத்தலிலும் சுறுசுறுப்பாக இருந்தது. இதெல்லாம் பெரியவர்களின் மந்தமான செயற்பாடுகள். நான் மிகவும் தனியனாய் உணர்ந்தேன். நான் குளிரில் விரைத்துப் போய்விடாதிருக்க, கணப்படுப்பின் தீ அணைந்து விடாமல் பார்த்துக் கொண்டேன். காலை முழுக்க நிலவறையிலிருந்து விறகுகளைக் கொண்டு வந்த வண்ணம் இருந்தேன். கணப்புக்கல் மீது சாய்ந்து கிடந்ததில், உடல் வியர்த்தும், சூடேறிக் கொப்பளித்தும் கிடந்தேன். ஒவ்வோர் அரைமணி நேரத்துக்கும் என் எதிரியைப் பார்ப்பதற்காக ஜன்னல் அருகில் சென்றேன். சுழலும் பனித்திரள்களின் காட்சியும், இரக்கமற்ற காற்று வீடுகளின் மீது மோதும் ஒலியும், என்னை மீண்டும் கணப்பருகில் சென்று சூடேற்றிக் கொள்ளத் தூண்டிற்று.
பின்மதியம் வரை இப்படியே பொழுதைக் கழித்தேன். சீக்கிரமே இருள ஆரம்பித்து விட்டது. பனி ஈய நிறத்துக்கு மாறிவிட்டது. காற்று நின்றுவிட்டது. இறந்துவிட்ட புயல் தெருவில் இன்னும் படுத்துக்கிடந்தது. ஜன்னலிலிருந்து பார்த்தவரைக்கும் உலகில் மக்கள் யாருமே இல்லாதது போலவே தோன்றியது. இருண்ட பனி வெறுமையாக இருந்தது. நான் நடுங்கியபடி கணப்பை நோக்கிச் சென்றேன்.
அரைமணி நேரம் கழித்து வாயிலில் அழைப்பு மணி ஒலித்தது. இரவுணவுக்கு விருந்தினர்கள் வந்திருக்கிறார்கள். எட்டு மைல்களுக்கு அப்பாலிருக்கிற கார்லிஸ் என்ற குறுநகரத்தில் வாழ்கிற ஜோனஸ்களே அவர்கள். அவர்கள் தங்கள் மகள் அன்னாவையும் அழைத்து வந்திருந்தார்கள்.
வீட்டுக்குள் விளக்குகள் எரிய ஆரம்பித்தன. நெருப்பின் வெப்பத்தில் வெந்தும், கிறங்கியும் கிடந்த நான் இரு குடும்பங்களையும் பெரிய மண்டபத்தில் சந்தித்தேன். புயல் விளைவித்த சேதங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள் அவர்கள். பறந்துவிட்ட கடை ஜன்னல்கள், கூரைகள் பற்றி, சாய்க்கப்பட்ட திசைகாட்டிகள் பற்றி, பனிக்குவியலில் கைவிடப்பட்ட வாகனங்கள் பற்றி செய்திகளைப் பரிமாறிக்கொண்டார்கள். நான் மகிழ்ச்சியோடு கேட்டுக்கொண்டிருந்தேன். பிறகு பேச்சு வேறு மந்தமான விஷயங்களுக்கு மாறிய போதுதான் நான் அன்னாவின் இருப்பை உணர்ந்தேன்.
ஒரு மூலையில் அமர்ந்து என்னை கவனித்துக் கொண்டிருந்தாள் அவள். அவள் செம்பட்டை முடி கொண்டவள்; என்னை விட இரு வயது மூத்தவள்; உயர்நிலைப் பள்ளிக்குச் செல்கிறவள். அவளை எனக்கு நீண்ட காலமாகவே தெரியும். அவளை நான் எப்போதும் விரும்பியதில்லை. அவள் எப்போதும் அமைதியாகவே இருப்பாள்; சிரிப்பதோ, ஓடியாடுவதோ கிடையாது; எல்லாரையும் எப்போது ஒரு சோகச்சிரிப்போடோ அல்லது தன் மனதில் ஏதோ முக்கியமான விஷயம் இருப்பதைப் போன்ற பார்வையோடோ எதிர்கொள்வாள். ஆனால் தற்போது அவள் என்னைப் பார்த்த பார்வையில் நான் அவள் மீது ஆர்வமானேன். அவள் என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருப்பாள் என்றும், எது அவளை என்னை நோக்கி அரைச் சோகத்துடன் புன்னகைக்க வைத்தது என்று யோசித்தேன்.
மேஜையில் அவளுக்கருகில் அமர்ந்து அவளை ஓரக்கண்ணால் பலமுறை பார்த்து, அவளும் என்னை அப்படியே பார்க்கிறாளென்று அறிந்து கொண்ட பிறகு என் இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது. உண்ணுவதில் ஆர்வமிழந்தேன். நான் அவளோடு தனித்திருக்க விரும்பினேன். அப்போதுதான் நாங்கள் இருவரும் அமர்ந்து வேறு யார் கண்ணிலும் படாமல் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டே இருக்க முடியும்.
இரவுணவிற்குப் பிறகு இரு குடும்பங்களும் எங்களை மாடி மேலிருக்கிற அறைக்குச் செல்ல எந்தக் கேள்வியுமின்றி அனுமதித்தன. அங்குதான் என்னுடைய பெரும்பாலான உடமைகளை வைத்திருந்தேன். துளைகளுடன் கூடிய கிரிப்பேஜ் சீட்டாட்ட பலகையை எடுத்து வைத்து, ஒரு கட்டு சீட்டையும் எடுத்தேன். மேஜைக்கு அடியில் எங்கள் இருவரது முழங்கால்களும் தொட்டன.
கிரிப்பேஜ் ஆட்டத்தை அவள் என்னைவிட நன்றாக ஆடினாள். நான் தோற்கையிலெல்லாம் என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள். எனக்கோ ஆட்ட்த்தின் மீது பாதி கவனம்தான் இருந்தது. நான் பேச இயலாது அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவளது முழங்கால்கள் தந்த மெல்லிய அழுத்தம் கூட என்னை பலவீனமாக உணரச் செய்தது. நாங்கள் விளையாட, விளையாட அவள் முகத்தின் அழகும், ஒளியும் மேலும் கூடியது. அவள் கண்களைச் சுற்றிலும் ஒரு படலம் தோன்றியது. அவளது புன்னகை என்னை நோக்கி விரைவாக நகர்வதைப் போல் மிக நெருக்கமாக இருந்ததில் நான் நடுங்க ஆரம்பித்தேன். என் முகம் சிவந்திருப்பதையும், என் நாக்கு கட்டப்பட்டிருப்பதையும் எண்ணி வெட்கினேன். இருப்பினும் பாதி அச்சமுற்றும், ஆனந்தமாய் எதையும் பொருட்படுத்தாததொரு நிலையில் – அன்னாவைக்கூட – நான் விளையாடிக் கொண்டிருந்தேன்.
நாங்கள் அபூர்வமாகத்தான் பேசிக்கொண்டோம். விளையாட்டைத் தொடர இயலாத அளவுக்கு நான் பதற்றமாயிருந்தால் விளையாட்டை நிறுத்த விரும்பினேன். ஆனால் விளையாட்டை நிறுத்தி விட்டால் இப்படி முழங்கால்கள் தொட்டபடி நாங்கள் அமர்ந்திருக்க இயலாது. சில கணங்கள் அவள் தன் தொடுகையைத் திரும்பப் பெற்றுக் கொள்ளும்போது நான் நடுங்கியபடி, எங்கிருந்தோ தொங்கிக் கொண்டிருப்பதைப் போலக் காத்திருப்பேன். இறுதியாக அவளது முழங்கால்கள் என்னை வந்தடையும் போது என் சுவாசம் சீராகும். சீட்டுகளின் முழுக்கவனம் செலுத்துபவனைப் போல முகம் நெறித்து அவற்றையே பார்த்துக் கொண்டிருப்பேன்.
நேரம் செல்லச் செல்ல, என் முகம் வீங்கி, ஏறுமாறானதைப் போல் உணர்ந்தேன். என் அங்க அடையாளங்கள் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு அசிங்கமாகி விட்டதைப் போல் தோன்றியது., நான் வாயைத் திருகியும், கண்களைச் சுழற்றியும், கன்னத்தைக் குவித்து ஓசை எழுப்பியும் இந்த நிகழ்விலிருந்து அன்னாவின் கவனத்தைத் திருப்ப முயற்சித்தேன். ஆனால் ஒரு புதிய அச்சம் என் கவனத்தைத் திருப்பியது. அன்னாவின் முழங்கால்கள் என் முழங்கால்களைத் தொட்டுக் கொண்டிருப்பதை அன்னா உணர்ந்து அவற்றை விலக்கிக் கொள்வாளோ என்று அஞ்சினேன். எனவே ஆட்டத்தில் ஆர்வம் கொண்டவனைப் போல் நடந்து கொள்ள ஆரம்பித்தேன். என் துரதிர்ஷ்டத்தைக் குறைகூறிக் கொண்டும், அழுகுணி ஆட்டம் ஆடுவதற்காக அவளைக் கண்டித்த வண்ணமுமிருந்தேன். எப்படியாவது அவளை ஆட்டத்தில் ஆர்வம் கொள்ளச் செய்ய வேண்டுமென்பதில் உறுதி கொண்டிருந்தேன். நாங்கள் செய்யும் காரியத்தில் அவள் ஆர்வமுற்று இருந்தால் எங்கள் முழங்கால்கள் உரசிக்கொண்டிருப்பதை அவள் அறியாதிருக்க முடியும் என்று நம்பினேன்.
கடைசியாக அன்னா இந்த விளையாட்டு சலிப்பையேற்படுத்துகிறது என்று சொன்னாள். கிரிப்பேஜ் பலகையை நகர்த்தினாள். அவள் முழங்கால்கள் எங்கிருக்கின்றன என்று உணர்ந்து அவற்றை அவள் விலக்கிக் கொள்வதற்காக மூச்சைப் பிடித்துக் கொண்டு காத்திருந்தேன். நான் அவளைப் பார்க்காதிருக்க முயற்சித்தும் கூட இந்த நிகழ்வின் காரணமாக ஏற்பட்ட பயத்தால் அவளையே உற்றுப் பார்க்கத் துவங்கினேன். அவள் என் மீது கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை. நாற்காலியில் பின் சாய்ந்து கண்களைப் பாதி மூடியிருந்தாள். முகத்தில் புன்னகையில்லை. அவள் எதையோ சிந்தித்துக் கொண்டிருக்கிறாள் என்பதை உணர்ந்தேன். இது என்னை திடுக்கிட வைத்த்து. என் தொண்டை கேள்விகளால் நிரம்பிக் கிடந்தது. ஆனாலும் எங்கள் முழுங்கால்களின் இந்த ரகசியத் தழுவலை முறிக்க மனமின்றி நான் எதுவுன் பேசாதிருந்தேன்.
அவள் கண்களிலிருந்த பனிப்படலம் அவள் கூந்தலுக்கும், முகத்துக்கும் பரவியதைப் போலிருந்தது. எங்கு நோக்கினும் அதே ஒளி வெள்ளம் அவளைச் சூழ்ந்திருந்தது. அவள் கை பலகை மீது கிடந்ததைக் கவனித்தேன். அந்தக் கையை எப்படியாவது தொடுவதற்கு ஆவல் கொண்டேன். ஆனால் அந்த எண்ணத்தில் ஏதோ மருட்சியற்று இருப்பதாக எனக்குப் பட்டது. பியானோ வாசிப்பதைப் போல் அவளது விரல்கள் மேஜை மீது தட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். அவள் கண்களிலிருந்த பனிப்படலத்துக்கோ, என் முழங்கால்களை தொட்டுக் கொண்டிருக்கும் அவளது முழங்கால்களுக்கோ தொடர்பற்ற முறையில் அவள் கரம் வித்தியாசமாக இருந்ததைக் கண்டேன்.
சில நிமிடங்கள் மௌனத்தில் கழிந்தன. பிறகு கீழிருந்து அன்னாவின் தாய் அவளை அழைத்தாள்.
‘அவர்கள் வீட்டிற்கு கிளம்பி விட்டார்களென்று நினைக்கிறேன். என்றேன். அன்னா தலையாட்டினாள். அவள் என்னை நெருங்கி உரசினாள். இதை வேண்டுமென்றே செய்தாளா அல்லது எழுந்து செல்வதற்கான முயற்சியில் தற்செயலாக நிகழ்ந்ததா என்னால் கண்டறிய முடியவில்லை.
‘ நீயும் ஏன் எங்களோடு வரக்கூடாது? என்றாள். பலகையின் மீது என்னை நோக்கிக் குனிந்தாள். ‘எங்கள் சறுக்கு வண்டியில் நிறைய இடமிருக்கிறது.
நான் பதிலளிக்குமுன் அவள் எழுந்து விட்டாள். என் முழங்கால்கள் குளிர்ந்தன. விளையாட்டுப் பலகையைத் தரையில் சாய்த்தேன். மிகுந்த சோகமாகவும், அவமானகரமாகவும் உணர்ந்தேன். அன்னா என்னைத் திரும்பிப் பார்க்காமலேயே கீழிறங்கிச் சென்று விட்டிருந்தாள். அவள் பின்னால் ஓடிவிடாதிருக்க என்னையே நான் கட்டுப்படுத்திக் கொண்டேன். ‘ இவன் ஒரு பெரிய முட்டாள். இவன் ஒரு பெரிய முட்டாள்; என்று என்னைப் பற்றிச் சொல்லி என்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருப்பாளென்று எனக்கு உறுதியாகத் தெரிந்தது.
நான் கீழிறங்கி வந்தபோது ஜோனஸ்கள் கிளம்பத் தயாராகி விட்டார்கள். அன்னாவின் தாய் என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள்.
‘ நீ ஏன் ஞாயிற்றுக்கிழமை வந்து எங்களோடு தங்கக்கூடாது? இங்கிருப்பதை விட கார்லிஸில் அதிகப் பனி உண்டு. என்றாள்.
‘நீ குச்சியை விட்டு ஆட்ட முடியாத அளவுக்குப் பனி உண்டு என்றார் ஜோனஸ் குடும்பத்தின் மற்றொரு உறுப்பினர். எல்லாரும் சிரித்தனர். அவர்கள் சிரித்துக் கொண்டிருக்கையில் என் தாய் எனது உடைகளை அணிந்து வருமாறு என்னை அவசரப்படுத்தினாள். எங்கள் வீட்டு வாயிலில் நிற்கிற இரு பலம் பொருந்திய குதிரைகள் மாட்டிய சறுக்கு வண்டியில் நான் ஜோனஸ் குடும்பத்துடன் செல்ல வேண்டுமாம்.
எல்லாரும் பிரியாவிடை பெற்றுக் கொண்டிருக்கையில் நான் எனது தோற்காலணிகள், வியர்த்தலாடை, மேலங்கி ஆகியவற்றை அணிந்தேன். அன்னாவின் கவனத்தை ஈர்க்க முயற்சித்தேன். அவளோ நான் அங்கிருப்பதை கவனியாதவளாக இருந்தாள். இது என்னைச் சோகமூட்டியது. கார்லிஸுக்குச் செல்ல வேண்டுமென்ற ஆர்வம் மெதுவாக என்னை விட்டு அகன்றது. மாறாக மாடியிலுள்ள என்னறைக்குச் சென்று எல்லா ஜோனஸ்களின் முகத்திலும் கதவை அறைந்து சாத்த விரும்பினேன். ஏதோ மாடியில் என்னுடன் முழங்கால்கள் உரசியபடி கண்களை மூடிக் கொண்டு அமர்ந்திராததைப் போல அன்னா மகிழ்ச்சியுடன் எல்லாருடன் பிரியாவிடை பெற்றுக்கொண்டும், சிரித்துக் கொண்டும், முத்தமிட்டுக் கொண்டுமிருப்பதைப் பார்த்தபோது எனக்கு துயரம் மிகுந்தது. நான் கைவிடப்பட்டவனாகவும், மறக்கப்பட்டவனாகவும் உணர்ந்தேன்.
இறுதியாக நான் தொப்பியை அணிந்து கொண்டு முகச்சுளிப்புடன் நின்ற போது என் குடும்பம் நடந்து கொள்ள வேண்டிய விதம் பற்றி அறிவுரைகளை வழங்கிக் கொண்டிருந்தது. நான் எதற்கும் செவி சாய்க்காமல் பயணத்தின் போதும், கார்லிஸை அடைந்த பின்னும் என்ன செய்ய வேண்டும் என்பதையே என் மனதில் சிந்தித்தபடியிருந்தேன். முக்கியமாக அன்னாவை நான் அலட்சியப்படுத்தப் போகிறேன். அவளுடன் பேசுவதோ, அவள் இருக்கிறாள் என்பதை நான் அங்கீகரிப்பதற்கு அடையாளமாக அவள் பக்கம் பார்வையைச் செலுத்துவதையோ செய்யப்போவதில்லை.
இந்த்த் தருணத்தில்தான் அன்னா, எல்லாரிடமும் பலமுறை பிரியாவிடை பெற்ற பின்பு, எதிர்பாராத விதமாக என் கையைப் பிடித்து, என் காதில் கிசுகிசுத்தாள்.
‘சீக்கிரம் வா. நல்ல இடமாகப் பார்த்துப் பிடிக்க வேண்டும். என்றாள்.
ஒரு வார்த்தையும் சொல்லாமல் நான் வீட்டை விட்டு வெளியே விரைந்தேன். பனிமூடிய படிகளில் வழுக்கியபடியும், பனிக்குவியலில் தடுக்கியபடியும் சென்றேன். சறுக்கு வண்டிக்குள் அன்னாவைப் பின்பற்றித் தொற்றி ஏறினேன். விவசாயத்துக்கு உபயோகப்படுத்தப்படும் வண்டி அது. கனமான மரப்பாளங்கள் மீது வைக்கோற்போரும், குதிரைப் போர்வைகளும் போட்டிருந்தது. இருக்கையில் ஒருவருக்கு மட்டுமே இடமிருந்தது. நான் உட்பட மிச்ச ஏழுபேரும் அங்கிகள் மூடிய வைக்கோலின் மீதுதான் படுத்துக்கொள்ள வேண்டும்.
அன்னா வைக்கோலுக்குள் பாதி புதைந்தபடி ஒரு போர்வையைப் போர்த்திக் கொண்டிருந்தாள். அவள் என்னிடம் என் ஆடையிலிருந்த பனியை உதறுமாறும், என்னை முழுக்கப் போர்வையால் மூடிக் கொள்ளுமாறும், வண்டி மலை மீது ஏறும்போது கீழிறங்கிக் குதிரைகளோடு நடக்க வேண்டாமென்றும் கட்டளைகள் இட்டுக் கொண்டிருந்தாள்.
‘நீ இறங்கி விடுவதால் எதுவும் ஆகப் போவதில்லை. என்றாள். நீ உள்ளேயே இருந்தாலும் அதே விசையோடுதான் இழுக்கும். மேலும் நீ வெளியே செல்வதை நான் விரும்பவில்லை.
மற்ற ஜோனஸ்களும் வெளியே வந்து வண்டிக்குள் எங்களைச் சூழ்ந்து கொண்டார்கள். அன்னாவின் தந்தை ஓட்டுனரின் இருக்கையை எடுத்துக் கொண்டார். தலையில் சால்வையோடு வெளிவந்த என் தாயாரிடம் கார்லிஸுக்கு அப்பாலும் நகரப் பணியாளர்கள் சாலையைத் துப்புரவு செய்து விட்டதால் அபாயம் ஏதும் இல்லை என்று உறுதி செய்தார். நான் எங்கே இருக்கிறேன் என்று என் தாய் விசாரித்ததைக் கேட்டேன். நான் வைக்கோல் போருக்குள் எங்கேனும் ஒளிந்திருக்கக் கூடும் திருமதி ஜோனஸ் பதிலிறுத்தார். எதுவும் பேச வேண்டாம் என்று அன்னா என் காதில் முணுமுணுத்தாள். நான் அவளுக்குக் கீழ்படிந்தேன்.
வண்டி கிளம்பியது. குதிரைகள் பனியை மிதித்து நகர்வதையும், சேணத்தின் மணிகள் சீரான ஒலியுடன் குலுங்குவதைக் கேட்டேன். மல்லாந்து படுத்து இரவை நோக்கினேன். வானத்தை நட்சத்திரங்கள் நிரப்பின. வீட்டுக் கூரைகளின் ஒரு வெண்ணிறப் பரப்பு தொங்கியது. தெரு அமைதியாக இருந்தது. ஒளியூட்டப்பட்ட ஜன்னல்கள் கொண்ட பனி போர்த்திய வீடுகளை இப்போது என்னால் பார்க்க இயலவில்லை. பனியின் புதிய வாசனையும், வைக்கோல்போர் மற்றும் குதிரைச் சேணத்தின் வாசனையும் என் மூக்கை முட்டின. சேணமலிகளின் ஒலியையும், வண்டிக்குக் கீழே பனி நொறுங்கும் ஓசையையும் கேட்ட வண்ணமிருந்தேன்.
மூன்று நாட்களாக வெறி கொண்டிருந்த புயலின் தீவிரத்தைப் போலவே இந்தக் குளிர்கால இரவின் அசைவின்மையும் தீவிரத்தோடு இருந்தது. இருந்த எல்லாப் பனியும், காற்றும் வீசித் தீர்த்துவிட்ட மாதிரி இருந்தது. இரவின் மிக உயர்ந்த நட்சத்திரம் ஒன்று புயலால் காலியாக்கப்பட்டு விட்டதைப் போலிருந்தது. படுத்துக் கொண்டு இந்த வெறுமையை உற்று நோக்குதல் வசியம் செய்யப்பட்டதைப் போலிருந்தது. பனிப்பொழிவைப் போலவே இதுவும் ஒடிச் சென்று ஐக்கியமாக வேண்டிய விஷயமாக இருந்தது. சில நிமிடங்கள் முன்பு பிரம்மாண்டமாகத் தெரிந்த நட்சத்திரம் நிறைந்த வானம் இப்போது அவ்வளவு பிரம்மாண்டமாக இல்லை. நான் இன்னும் நிறைய பார்க்க விரும்பினேன்.
அன்னாவை ஏறக்குறைய மறந்தே விட்டிருந்தேன். இப்போது எனக்குப் பரிச்சயமான கதகதப்பு என்னை அழுத்திக் கொண்டிருந்தது. சறுக்கு வண்டியால் குலுக்கப்பட்டதைப் போல அவள் என்னருகில் இன்னும் நெருங்கி வந்திருந்தாள். என்னை விலகுமாறும், அவளுக்கு இடம் விடுமாறும் எனக்கு அவள் கட்டளையிடுவதற்காகக் காத்திருந்தேன். ஆனால் அவள் அமைதியாக இருந்தாள்.
பக்கவாட்டிலிருந்த என் கரம் அவள் விரல்களில் பட்டது. நான் இப்போது வானத்தையும், அதில் தூரத்தில் எப்பொழுதோ நின்று விட்ட மெல்லிய பனிப்பொழிவைப் போல் சிதறிக் கிடக்கிற நட்சத்திரங்களையும் மறந்து விட்டேன். இரவும், பனியும் வெளிச்சமும், சேணமணிகளின் குலுங்கலும் மறைந்து விட்டன. என் விரல்கள் மட்டுமே உயிர் பெற்றிருந்தன. விளையாட்டுப் பலகை மீது அவளது விரல்கள் தாளமிட்டதைப் பார்த்தபோது, அவற்றைத் தொடமுடியும் என்ற எண்ணம் புதிரானதாகவும், மயக்கம் தருவதாகவும் இருந்தது. ஆனால் இந்தப் போர்வைகளுக்குள் வைக்கோல்போருக்குள் மறைந்திருக்கிற இந்தக் கரம் மேலும் உயிர் கொண்டதாகவும், மர்மமானதாகவும், அவளிடமுள்ள வேறெதையும் விட பரிச்சயமுள்ளதாகவும் தோன்றியது. எங்கள் விரல் நுனிகள் தொட்டுக் கொண்டபடி, அதற்குமேலும் நகர இயலாத வண்ணம் படுத்துக் கிடந்தேன். அவள் கரங்களை நெருங்கவிரும்பியதில் கிறக்கம் கொண்டேன். ஆனால் நெருங்கவியலாத வண்ணம் சக்தியற்றவனாகவும் இருந்தது.
நிமிடங்கள் நகர்ந்தன. இரண்டு ஜோனஸ்கள் பாட ஆரம்பித்தனர். குதிரைகளின் குளம்பொலியும், மணிகளின் குலுங்கலும், பனி நொறுங்கும் ஓசையும் அவர்களது மென்மையான பாடலில் ஒரு பகுதியாகத் தோன்றின. நானும் பாட விரும்பினேன். இந்த அமைதியான இரவில் வழுக்கிச் செல்லுகிற சறுக்கு வண்டிக்குள் சட்டென்று எழுந்து நின்று அலற விரும்பினேன்.
அப்பொழுது நான் கிறக்கமுறும்வரை வேண்டுமென்று விரும்பியிருந்த அவளது விரல்கள் போர்வைக்கு அடியில் கதகதப்பான வைக்கோல் போரில் என்னை நோக்கி நகர்ந்தன. அவை என் கரம் வரை வந்து என் கரத்தை மூடிக் கொண்டன. என் உள்ளங்கைகளில் அவற்றின் அழுத்த்ததை உணர்ந்தேன். இரவு ஒரு கனவாக மாறியது. என் கண்களைத் திறந்து சிதறிக் கிடந்த நட்சத்திரங்களைப் பார்த்தேன். அவற்றின் மீது ஒரு படலம் படர்ந்திருப்பதைப் போலிருந்தது. நாங்கள் வழுக்கிச் சென்று கொண்டிருந்த பனி படர்ந்த மலைகளும் அந்தப் படலத்தின் பின்னே மின்னிக் கொண்டிருக்க, நான் பார்த்துக் கொண்டிருந்த இரவு தன் நேரத்தை இழந்தது. பனி மீது நகர்ந்து கொண்டிருக்கிற இந்த சறுக்கு வண்டியைப் போலல்லாமல், மாறாததும், நகராததுமான நட்சத்திரங்கள் நிறைந்த குளிர்கால இரவாக அது நீண்டிருந்தது.

அன்னாவின் அருகில் படுத்தபடி, அவள் கரத்தை என் கரத்துக்குள் வைத்தபடி, இந்த வெண்மலையின் கீழ் பனிச்சுழலில் பறந்து செல்லும் இந்த சறுக்கு வண்டியிலிருந்தபடி, இந்த இரவு முடியவே முடியாது என்று எண்ணிக் கொண்டேன்.

Comments

Popular posts from this blog

சாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு நாவல்கள்

சாதன சதுஷ்டயம் ஓர் அறிமுகம்.

பேராசிரியரின் கிளி - சிறுகதை